துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் பயணியொருவர் தனது மேலாடையை கழற்றிவிட்டு, சிகரெட் ஒன்றையும் பற்றவைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மது போதையிலிருந்த அந் நபர், தான் விமானத்தில் இருப்பதை மறந்துவிட்டாராம். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிளைட் ஈகே 020 எனும் இவ் விமானம், கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரிலிருந்து துபாய் நோக்கி சென்றது. இதன்போது பயணி ஒருவர், இடுப்புக்கு மேல் தனது ஆடைகளை கழற்றிக் கொண்டதுடன் சிகரெட் ஒன்றையும் பற்ற வைத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
6 மணித்தியாலங்கள் கொண்ட இப் பயணத்தின்போது, தான் சிகரெட் புகைத்ததாகக் கூறப்படுவதை அந் நபர் நிராகரித்தார். எனினும், அவரின் ஆசனத்தில் சிகரெட் பக்கெற் ஒன்று ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் விமானத்தில் இருப்பதை மறந்துவிட்டதாகவும் தனது நடவடிக்கைக்காக மன்னிப்பு கோருவதாகவும், தலைமை விமானியிடம் அப் பயணி தெரிவித்தார். மேற்படி விமானமானது உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான எயார் பஸ் 380 ரகத்தைச் சேர்ந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு தளங்களைக் கொண்ட இவ் விமானத்தில். மேல் தளத்திலுள்ள மதுபானக் கூடத்துக்குச் சென்று அதிக மதுபானம் அருந்தியதாகவும், ஒரு கட்டத்தில் மதுபானம் அருந்துவதை நிறுத்துமாறு விமான ஊழியர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் மன்செஸ்டர் நகரவாசிகளின் உச்சரிப்புடனான ஆங்கிலத்தில் உரத்த சத்தத்தில் பேசிக்கொண்டிருந்ததாக சக பயணியொருவர் தெரிவித்துள்ளார். விமானம் தரையிறங்கியவுடன் ஏனைய பயணிகள் வெளியேறியபோது, மேற்படி பயணி விமான ஊழியர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.






