மாவனல்ல நகரிலுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக அதனை மீளச்செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை வங்கி முகவர் தேடிச்சென்ற போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்குமாறினால் தாக்கி காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஒன்றிலிருந்து கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை தேடி வங்கி முகவரொருவர் தனது உதவியாளரொருவருடன் அரனாயக்க, வெலிமன்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கடன் தவணைப்பணம் செலுத்த தவறியமை தொடர்பில் விசாரித்துள்ளனர்.
அதன்போது கோபமுற்ற அப்பெண் விலக்குமாறினால் வங்கி முகவரின் முகம் மற்றும் தோற்பட்டை பகுதிகளில் பலமாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் காயமுற்ற வங்கி முகவர், அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான வங்கி முகவரின் தோற்பட்டை எலும்பொன்று முறிந்துள்ளதுடன் பற்கள் இரண்டு உடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
21 வயதான இவ்வங்கி முகவர் கடன்காரரைவிசாரிக்கும்போது அயலவர்களுக்கு கேட்கும் விதத்தில் சத்தமிட்டதனால் கடனாளியான பெண் கோபமுற்று தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.






