க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களில் 12 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக அவ்வைத்தியசாலையிலேயே பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில் சிறியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றுவரை 47, 900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 77 பேர் டெங்கினால் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதற்கமைய முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதார சேவையாளர்கள் ஒன்றிணைந்து புகை விசிறுதல் மற்றும் வீடுகளை பரிசோதனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 4 நாட்களினுள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கமைய 77,728 வீட்டு சூழல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட 1140 சுற்றுச் சூழல் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 9188 இடங்களை சுத்தம் செய்யப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 2,882 வளாகங்களுக்கு அறிவித்தல்கள் மற்றும் இவ்வாறான குடம்பிகள் பெருகத்தக்க சூழலை வைத்திருந்த 616 பேருக்கு வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களில் 12 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை (ஐ.டி.எச்.) இல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்காக அவ் வைத்தியசாலையிலேயே பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களது உடல்நிலை தொடர்பில் வைத்தியர்கள் தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டுவருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.