வவுனியாவில் நடைபெற்ற நட்புறவை பேணுவதற்கான காற்பந்து சுற்றுப் போட்டியில் மன்னார் அணி வெற்றி!!

771

 
வவுனியாவில் சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் அனுசரணையின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் நட்புறவைப் பேணுவதற்கான காற்பந்து சுற்றுப் போட்டி நேற்று(15.12.2016) வவுனியா தேசிய கல்லூரி வளாகத்தில் ஆரம்பமானது.

புனர்வாழ்வு ஆணையாளர் செயலகத்தின் மூலம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் பங்கு பற்றிய இந்த காற்பந்து சுற்றுப் போட்டிக்கு வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 08 அணிகள் கலந்து கொண்டிருந்தன.

இதன் இறுதி போட்டி இன்று (16.12.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் மன்னார் நகர அணியும் மன்னார் மாந்தை அணியும் மோதின. இதில் மன்னார் நகர அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பணப்பரிசில்களும் வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.

இக் காற்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு சிங்கர் நிறுவனம் அனுசரணை வழங்கியதுடன், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கான பரிசில்களை சிங்கர் வவுனியா மாவட்ட முகாமையாளர் M.R.M.நிஷாக், சிங்கர் வவுனியா கிளையின் முகாமையாளர் உதயகுமார் கஜதீபன் ஆகியோர் வழங்கினர்.