இலங்கைப் பெண்ணை வெளிநாட்டில் விபசாரத்தில் ஈடுபடுத்திய இருவருக்கு கடூழியச் சிறை!!

515

26 வயதான விவாகமான இலங்கைப் பெண்ணொருவரை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கு அவரை பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் வழக்குத் தொடரப்பட்டிருந்த இருவருக்கு தலா ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,40,000 ரூபா நட்ட ஈட்டுடன் 2 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்தவேண்டுமென அவிசாவளை மேல்நீதிமன்ற நீதியரசர் அமல் திலகரத்ன நேற்று உத்தரவிட்டார்.

இப்பாகமுவ, வேவல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாலசூரிய மற்றும் சுகத் பண்டார பாலசூரிய எனும் இரு சந்தேகநபர்களும் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசித்த விவாகமான பெண்ணொருவருக்கு வெளிநாடொன்றில் தொழில் பெற்றுத்தருவதாக ஏமாற்றி அங்கு அனுப்பியுள்ளனர்.

பின் அவரைப் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 2004 ஜனவரி 15ஆம் திகதி இந்த வழக்கு கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

ஆரம்ப விசாரணைகளின் பின் அவிசாவளை மேல் நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை முடிவில் மேற்கூறிய தீர்ப்புகள் வழங்கப்பட்டன.