15 வயதுச் சிறுமியை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

1148

தமிழகத்தில் 15 வயது சிறுமியை பெற்றோரே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவரான இவருக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் ஒருவர் இருந்துள்ளார். இவரை கடந்த ஆண்டு தமது கிராமத்திற்கு அருகே உள்ள பொட்டனம் கிராமத்தைச் சேர்ந்தவரான ஓட்டுநர் சுரேஷ் குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இத்திருமணம் குழந்தை திருமணம் என்பதால் மாவட்ட அதிகாரிகள் சிறுமியை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை படிக்க வைப்பதாக உறுதியளித்து பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் சிறுமியை படிக்க வைக்காமல், திருமணம் செய்து வைத்த சுரேஷ் குமாருடன் மீண்டும் இணைந்து வாழும்படி வற்புறுத்தியுள்ளனர்.

இதையறிந்து மீண்டும் சிறுமியை குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர்‌.

இந் நிலையில், கடந்த வாரம் சிறுமியை பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று அந்த சிறுமி திடீரென உயிரிழந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் தான் அச்சிறுமியை துடிதுடிக்க எரித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.