திருமணத்துக்கு மறுத்த 16வயது சிறுமியை பெற்றோரும் அவரது சகோதரனும் கொலை செய்து எரித்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையிலேயே சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்ட வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் ஐஸ்வர்யா (16). தங்கராஜும் அவரது மனைவியும் மகள் ஐஸ்வர்யாவுக்கும் அவருடைய உறவினர் சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா, இந்த சம்பவம் குறித்து நாமக்கலிலுள்ள சிறார்கள் பாதுகாப்பு நிலையத்தில் தகவல் அளித்தார். இதனையடுத்து அந்த நிலைய அதிகாரிகள் ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
இதனிடையே கடந்த புத ன்கிழமை காப்பகத்துக்குச் சென்ற ஐஸ்வர்யாவின் உறவினர்கள், அவருடைய தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஐஸ்வர்யா கடந்த சனிக் கிழமை இரவு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை அவர்களது பெற்றோர்கள் சுடுகட்டில் எரித்து விட்டனர்.
இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ள தாவது, ஐஸ்வர்யா அதே பகுதியை சேர்ந்த 17-வயதுடைய ஒரு மாணவரை காதலித்துள்ளார். இதுகுறித்து அறிந்த, ஐஸ்வர்யாவின் பெற்றோர், அவர்களின் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்ய வைக்க வற்புறுத்தி உள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த ஐஸ்வர்யா, தனக்கு பிடித்தமான நபரைத்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது 19-வயதுடைய அண்ணன் சுபாஷ் சந்துரு, ஐஸ்வர்யாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளார். பின்னர் ஐஸ்வர்யாவின் உடலை பொலிஸாருக்கு தெரிவிக்காமல் அவரது தந்தை தங்கராஜ் மற்றும் உறவினர்கள் எரித்து விட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அவரது அண்ணன் சுபாஷ்சந்துருவையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தங்கராஜையும் பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவியின் அண்ணன் சுபாஷ்சந்துரு பரமத்தியிலுள்ள சீர்திருத்தப்பள்ளியிலும், தங்கராஜ் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.






