வவுனியாவில் நேற்று இரவு உணவகம் வைத்திருக்கும் பிரபல வர்த்தகரின் மகன் மீது எட்டுப்பேரடங்கிய குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஏ9 வீதியில் பிரபல உணவகத்தின் உரிமையாளரின் மகன் தனது உணவகத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குறித்த உணவகத்தில் தேனீர் கொடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து நேற்று இரவு குறித்த இளைஞன் இரண்டாம் குறுக்குத் தெருவிலிருக்கும் தனியார் பேரூந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்த 8 பேரடங்கிய குழுவினர் இளைஞர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டதுடன் இளைஞன் மீது டீசல் ஊற்றப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக முயக்கமுற்ற நிலையில் இருந்த இளைஞனை பேரூந்தில் ஏற்றிக்கொண்டு சூடுவெந்தபுலவிற்கு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தினை அறிந்த குறித்த இளைஞனின் சகோதரன் குறித்த பேரூந்தினை பின்தொடர்ந்து பேரூந்தில் ஏறியபோது இருவரையும் உள்ளே இருந்த நபர்கள் கீழே தள்ளி விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக தாக்குதலுக்குள்ளான தர்மலிங்கம் சுபராஜ் வயது 26 பூந்தோட்டம் ஸ்ரீநகரில் வசித்துவரும் இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் திவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து தாக்குதல் நடத்திய இரு வரையும் குறித்த பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.