கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அஞ்சலி தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். பின் பத்திரிகையாளர்களிடம் தனது சித்தி பாரதிதேவியும் இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும் பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் என்று கூறி இயக்குனர் களஞ்சியம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி ஆஜராகாமல் இருந்து வந்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அஞ்சலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த விசாரணையின்போது அவர் ஆஜராவார் என்று தெரிவித்தார். இதனை ஏற்க மாஜிஸ்திரேட் மறுத்து விட்டார்.
மேலும் நடிகை அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3ம் திகதிக்கு தள்ளிவைத்தார்.