வவுனியாவில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பாதிப்பை எதிர்நோக்கும் மக்கள்!!

329

 
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரிகூழாங்குளம் செல்லும் வீதியோரத்தில் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமையால் போக்குவரத்து செய்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் காணப்படும் நீர் பாய்ந்து ஓடும் பகுதியில் வீட்டு கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு அவை குப்பை மேடாக காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த பகுதியில் கழிவுகள் நிரம்பி காணப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதுடன் அவை காற்று மற்றும் விலங்குகளால் அருகில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபை உடனடியாக கவனம் செலுத்தி அந்த பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.