டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பேன் : ரோகித் ஷர்மா நம்பிக்கை!!

336

Rohit-Sharma

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இளம் வீரர் ரோகித் ஷர்மா சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை போட்டி மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டி ஆகியவற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

100 ஒருநாள் போட்டியில் ஆடி இருக்கும் ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டி அறிமுகம் என்பது எட்டாக்கனியாக இருந்து வருகிறது.
2010ம் ஆண்டில் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகம் ஆக இருந்த ரோகித்ஷர்மா பயிற்சியின் போது கால்பந்து விளையாடுகையில் காயம் அடைந்து விலகினார்.

2011ம் ஆண்டில் நடந்த மேற்கிந்தி தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 2012ம் ஆண்டு அவுஸ்திரேலிய தொடர் ஆகியவற்றுக்கான டெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடம் கிட்டினாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நவம்பர் மாதத்தில் மேற்கிந்தி தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதில் ரோகித் ஷர்மா நம்பிக்கையுடன் உள்ளார். இது குறித்து ரோகித்ஷர்மா கூறுகையில்..

அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அழைப்பில் எனக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விஷயங்கள் எனது கையில் இல்லை. சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு பங்களிப்பை அளிப்பதே எனது பணியாகும். வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அறிமுக வீரராக களம் இறங்க முடியும் என்று எதிர்நோக்கி இருக்கிறேன் என்றார்.