கின்னஸ் சாதனைக்காக உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் வெற்றிகரமாக திறந்து வைப்பு!!

1076

கின்னஸ் சாதனைக்கென உருவாக்கப்பட்ட உலகின் உயரமான கிறிஸ்மஸ் மரம் வெற்றிகரமாக திறந்துவைக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் குறித்த கிறிஸ்மஸ் மரம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

நாடெங்கிலும் இருந்து வருகை தந்துள்ள பெருந்திரளான மக்கள் கிறிஸ்மஸ் மரத்தை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் ஏற்பாட்டில் தனியார் நிதியீட்டில் அமைக்கப்பட்டஉலகின் உயரமான கிறிஸ்மஸ் மர நிர்மாணத்தின் அதிக செலவை கருத்திற்கொண்டு கர்தினாலின் கோரிக்கைக்கு இணங்க நிர்மாணப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக உரிய நேரத்துக்குள் நிர்மாணப் பணிகளை முடிக்க முடியாத நிலை உருவானது.

எனினும் தென்சீனாவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட செயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், 57 மீற்றர்(187 அடி) அளவான மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இந்த மரத்தை கின்னஸ் சாதனையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளது.

இந்த மரத்தில் சுமார் 60ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 6 அடி உயரமான நத்தார் தாத்தா உருவமும் இந்த மரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்னமும் குறித்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை மரமாக அங்கீகரிக்கப்படவில்லை.

அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டு. கின்னஸ் சாதனை குழுவால் தணிக்கைப் படுத்தப்பட்டதன் பின்பே குறித்த மரம் கின்னஸ் சாதனை மரமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.