சுவிஸ்லாந்தில் காதலியை கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
23 வயதான தன் காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த நிலையில், சுவிட்ஸர்லாந்தில் இருந்து வெளியேறிய குறித்த சந்தேகநபர் போலி ஆவணங்களை தயார் செய்து நியூசிலாந்தில் குடியேறியுள்ளார்.
பின்னர் 2004ம் ஆண்டு அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக்கொண்டு, Auckland நகரில் குடியேறிய அவர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும், கடந்த 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காதலியின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மூலம் குறித்த தமிழர் தான் கொலையாளி என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 2015ம் ஆண்டு நியூசிலாந்து அரசின் அனுமதியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு பிரதான செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.






