பிரித்தானியாவில் ஈழத்து இளைஞர்கள் ஐவர் பலியானமைக்கு யார் காரணம் : புதிய சர்ச்சை!!

460

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் எசிக்ஸ் மாநிலத்தில் உள்ள கம்பசாண்ட் என்னும் கடலில் மூழ்கி இலங்கை தமிழ் இளைஞர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குறித்த கடல் பிரதேசத்தின் பாதுகாப்பு தேவையினையும் எடுத்துக்காட்டியிருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது பலவேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அந்த கடல் பகுதியில், ஒரு உயிர் காக்கும் பாதுகாவலர் ஒருவர் கூட இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் உயிரிழந்தமை தொடர்பில் கவுன்சில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நீச்சல் தெரியாதவர்கள் கடலுக்கு செல்வதன் காரணமாகவே இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இவ்வாறான கடலில் எப்படி உயிர் காக்கும் பாதுகாவலர் ஒருவர் இல்லாமல் இருக்க முடியும் என தற்போது கேள்வி எழுப்பட்டுள்ளது.

மேலும், பணத்தை மீதப்படுத்தும் நோக்கில் இவ்வாறான ஆட்களை கவுன்சில் நியமிப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பணம் உழைக்கும் நோக்கில் தேவைக்கு அதிகமான டிராபிக் வார்டனை அமைத்தல், மற்றும் பல இடங்களில் கமராக்களை பொருத்தி வேகமாக செல்லும் வாகனங்களை படம் எடுத்து பணம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், உயிர் சம்பந்தப்பட்ட விடயங்களில் தொடர்ந்தும் அசமந்த போக்குடனேயே இருப்பதாக தற்போது புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.