பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழ்மக்களின் நம்பிக்கைகள் நனவாகட்டும் அமைச்சர் சத்தியலிங்கம்!!

560

பிறக்கும் புதிய ஆண்டிலாவது தமிழ்மக்களின் நம்பிக்கைகள் நனவாகட்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது புதுவருட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

தமிழர்களின் கடந்த காலங்கள் துன்பகரமானவை. சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ்மக்கள் இந்த தேசத்தில் இரண்டாந்தர பிரஜைகளாகவே ஆளும் வர்க்கத்தினரால் நடாத்தப்பட்டு வந்துள்ளனர்.

நீண்ட வரலாற்றையும், கலாசாரத்தையும், மொழியையும் கொண்ட தமிழினம் கடந்த 68 வருடங்களாக நாட்டில் வாழுகின்ற ஏனைய இனங்களைப்போல சமமாக நடாத்தப்படவில்லை. இதனால் விடுதலைவேண்டி நமது இனம் சகலவழிகளிலும் தொடர்ச்சியாக போராடிக்கெண்டுதான் இருக்கின்றது.

எனினும் இன்று வரை தீர்வெதுவும் கிடைக்கவில்லை. நம்பிக்கையே வாழ்க்கையாக ஒவ்வொரு வருடமும் கடந்து செல்கின்றது. பிறக்கும் 2017ம் ஆண்டிலாவது தமிழ் மக்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய நிரந்தர சமாதானம் கிடைக்கட்டும். கருத்துவேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க இந்த ஆண்டில் திடசங்கற்பம் கொள்வோம் என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.