வவுனியா விக்ஸ் காட்டுப்பகுதியில் இருந்து மக்களை வெளியேறுமாறு வனத்துறை உத்தரவு : மக்கள் ஆர்ப்பாட்டம்!!

941

 
வவுனியா இராசேந்திரங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ்காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது.

பல்வேறு இடங்களிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வந்த மக்கள் அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவந்த நிலையில் 2008ம் ஆண்டு பற்றைகளும் முட்செடிகளும் நிறைந்து காணப்படும் விக்ஸ்காடு என அழைக்கப்படும் பகுதியில் சுயமாகக் குடியேறியிருந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து பின்னரான காலப்பகுதியில் அம் மக்களுக்கான வாக்குரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்றையதினம் திடீரென விக்ஸ் காட்டு கிராமத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் அம் மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன், காடு வெட்டியதாக கிராம மக்கள் மீது குற்றஞ்சாட்டி நாளைய தினம் வவுனியாவில் அமைந்துள்ள வனத்துறையினரின் அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையிலே இன்று இராசேந்திரன்குளம் விக்ஸ் காட்டுப் பகுதியில் வசித்து வரும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.