தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிப்பறை மற்றும் வகுப்பறைகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தப்படுத்த துப்புரவு பணியாளர்கள் கிடையாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து பணிகள் ஒதுக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும்.
ஆனால் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளி மாணவர்களை எந்த விதமான வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவு உள்ளது.
இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்த வேலையும் வழங்குவது கிடையாது.
பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறை பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது கிடையாது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் பள்ளிகள் சுத்தமின்றி உள்ளன. இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி துவங்குவதற்கு முன்பு கழிப்பறையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
தற்போது கிராம ஊராட்சிகளில் 16 ஆயிரத்து 726 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது. இவர்களையாவது பள்ளிகளை சுத்தப்படும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.