எத்தியோப்பியா தலைநகர் அடிடிஸ் அபாபா நகரில் மிருககாட்சி சாலை உள்ளது. இங்குள்ள மிருகங்களை பார்க்க தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். அங்கு 15 சிங்கங்கள் உள்ளன. அவற்றை பராமரிக்க அபேராசில்சாய் (51) என்ற ஊழியர் இருந்தார்.
நேற்று காலை அவர் கைனென்சியா என்ற சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று துப்புரவு பணியை மேற்கொண்டார். அப்போது கூண்டின் உள் அறைக்குள் அந்த சிங்கம் தூங்கி கொண்டிருந்தது. எனவே, அவர் கூண்டை பூட்ட மறந்து விட்டு தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கண் விழித்த அந்த சிங்கம் திடீரென பாய்ந்து வந்து ஊழியர் அபேராவை கடுமையாக தாக்கியது. அவரது கழுத்தில் கடித்து குதறி ரத்தம் குடித்தது.இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவலர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்சியை எற்படுத்தினர். இருந்தும் சிங்கம் அவரை கடித்து குதறியது.
இதனால்அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இக்கோர சம்பவத்தை தொடர்ந்து மிருக காட்சி சாலை பொதுமக்கள் பார்க்க தடை விதித்து மூடப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் தற்போது தான் ஊழியரை சிங்கம் தாக்கி கொன்றுள்ளது.