26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் : மீண்டு வருவதற்கு பணத்தை எப்படி சேர்த்தார் தெரியுமா?

217

இலங்கையில் நிலவிய போர்ச் சூழலில் காணாமல்போன பெண் சுமார் 26 வருடங்களின் பின் திரும்பி வந்துள்ள நிலையில் அவர் குறித்து மேலும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது.

திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்து வீட்டில் தனித்து இருந்த நிலையில் நாவலப்பிட்டியிலுள்ள கணவரின் உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணை கொழும்புக்கு அழைத்துச் சென்று வீடொன்றில் ஒப்படைத்தனர். அப்போது குறித்த பெண்ணுக்கு 18 வயது மாத்திரமே.

கொழும்பில் குறித்த பெண்ணை வீட்டுச்சிறையில் வைத்துள்ளார்கள். இது குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் விரிவான செய்திகளை வழங்கியிருந்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தகவலை குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இவர் அந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அங்குள்ள ஆண்களின் உடைகளை கழுவும் சந்தர்ப்பங்களில் அதற்குள் தவறி விடப்படும் பணத்தை இரகசியமாக சேமித்து வைத்துள்ளார்.

அவ்வாறு சேமித்து வைத்த பணத்தில்தான் குறித்த பெண் தப்பி வந்து தனது செலவுகளுக்காகவும், வீட்டிற்கு செல்வதற்கான பயண செலவையும் கவனித்துள்ளார்.

43 வயதாகும் பத்மகுமாரி என்பவரே இவ்வாறு 26 வருடங்களின் பின் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து திரும்பி வந்துள்ளார்.

பத்மா குமாரி காணாமல் போயிருந்த காலப்பகுதியில் இவரின் உறவினர்களால் இவருக்கு ஆத்ம சாந்தி கிரியைகள் செய்யப்பட்டுள்ளதுடன் கங்கஹியல கோரல பிரதேசசெயலகத்தின் ஊடாக காணாமல் போனோருக்கான நிவாரணமும் பெறப்பட்டுள்ளதோடு நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.