ஆணைக்குழு அமைத்து காலம் கடத்தும் அரசு காணாமல்போனோரின் உறவினர்களுக்கு தீர்வு வழங்கவில்லை என தெரிவித்துள்ள என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கியது போன்று இப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் கடத்தப்பட்டவர்களும் இராணுவத்திடம் உறவினர்களால் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டவர்களும் என பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவாகளது நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவர்களது உறவினர்களுக்கு தகுந்த பதிலை தெரியப்படுத்தவில்லை.
மாறி மாறி வந்த அரசுகளை நம்பியவர்களாக அவர்கள் இருந்தபோதிலும் எந்த அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் இல்லை. இந் நிலையில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை என்ற பெயரில் காலங்களை கடத்தியதே தவிர அதனூடாக தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவர்கள் தமது சாத்வீக ரீதியிலான போராட்டங்களின் ஊடாக தமது உரிமையை கோருகின்ற போது வாக்குறுதியை அளிக்கும் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகம் ஒன்றினை அமைப்பதிலேயே காலத்தினை கடத்தும் அரசு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றதா என்கின்ற கேள்வியையே எழுப்புகின்றது.
இந் நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்பதுடன் ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டில் நடத்தப்படவேண்டும் என்பதற்காக உணர்வுபூர்வமாக இளைஞர்கள் ஆதரவு வழங்கி போராட்டங்களை நடத்தியிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இப் போராட்டத்திற்கும் இளைஞர்கள் அணிதிரண்டு தமது ஆதரவினை வழங்க வேண்டும்.
இந் நிலையில் காணாமல் போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு திர்வு கிடைக்கும் வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தத்தினை பிரயோகிக்கும் என்பதனையும் உறுதிபடத்தெரிவிக்கின்றேன் என அவர் தனது அற்கையில் தெரிவித்துள்ளார்.






