பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதை கடித்து காயப்படுத்திய யுவதி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்றினால் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான எம்மா விலே எனும் யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதிகாலை 00.45 மணியளவில், வீதியொன்றில் எம்மாவிலேவும் மற்றொரு பெண்ணுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்களால் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எம்மாவை கைது செய்ய முற்பட்டபோது அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். பின்னர், எம்மாவை கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் வாகனத்தில் ஏற்றியபோது, பெண் பொலிஸ் உத்தியோகத்தரான ஜெஸி க்கா ரோன்டினெலின் காதை கடித்தார் என சட்டத்தரணி ஏ.ஜே. கெமிலியோ நீதின்றில் தெரிவித்தார்.
அவ்வேளையில், பொலிஸ் திணைக்களத்தில் ஜெஸிக்கா இணைந்து 6 வாரங்களே ஆகியிருந்தன எனவும் இத்தாக்குதலினால் அவருக்கு இரு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும் சட்டத்தரணி கெமலியோ கூறினார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் காதைக் கடித்த குற்றச்சாட்டை எம்மாவிலே ஏற்றுக்கொண்டார். அதையடுத்து மோதலில் ஈடுபட்டமைக்காக இரண்டரை வருட சிறைத்தண்டனையும் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றத்துக்காக ஒன்றரை வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி திமோதி ஃபீலி கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.
இவ்விரு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எம்மா விலே அனுப விக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.






