வவுனியாவில் உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை மோசம் : வைத்தியர்கள் தெரிவிப்பு!!

974

 
வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த வைத்திய குழு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிலையில் வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சர்க்கரையின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதிக்குமாறும் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளனர்.

உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் நாளை பேரணியொன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தவுள்ளார்.

மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இன்றயை தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண முதலமைச்சரின் பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, செ.மயூரன், சிறிடெலோ கட்சியின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.