தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, மதுரை விமான நிலையத்தினுள் செல்வதற்கான பிரதான வழி தடைப்பட்டிருந்ததால், ஸ்ரீலங்கன் விமான உத்தியோகத்தர்கள் விமான நிலையத்தினுள் நுழைந்து கடமைக்கு சமுகமளித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டின் சில விமான நிலையங்களினூடான விமான பயணங்கள் தாமதமாகின.
இந்நிலையில், மதுரையிருந்து கொழும்பு நோக்கி பயணமாகவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தின் தலைமை விமானியான கெப்டன் அல்விஸ் மற்றும் விமான உத்தியோகத்தர்கள், தங்களுக்கு தங்குவதற்காக ஒழுங்கு செய்துகொடுக்கப்பட்டுள்ள ஹோட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் நோக்கிச் சென்றனர்.
அதன்போது ஆர்ப்பாட்டங்களின் காரணமாக வீதியெங்கும் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்ததன் காரணமாக விமான நிலையத்துக்கு சென்ற பயணிகளும் வேறு சில விமான பணிக்குழுவினரும் மீண்டும் தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினர்.
எனினும் கடமை உணர்வு கொண்ட ஸ்ரீலங்கன் விமானசேவை பணிக்குழுவினர் அவ்வாறான முடிவெதனையும் எடுக்காது தாங்கள் பயணித்த வாகன சாரதியின் உதவியுடன் மாற்றுவீதியில் விமான நிலையம் நோக்கிச் சென்றனர். அதன் பின்னரும் பிரதான வாயிலுக்கூடாக அவர்கள் செல்ல முடியவில்லை.
இதனால், விமான நிலையத்தை அண்மித்தவுடன் தமது உடைமைகளுடன் நடந்து சென்ற மேற்படி உத்தியோகத்தர்கள், விமானநிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிக்குள் புகுந்து தமது விமானத்தை அடைந்தனர்.
இவ்வாறு இவர்கள் விமான நிலையத்துக்குள் நுழைந்த காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.






