வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றுங்கள்!!

276

வவுனியாவில் உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாக்குமாறு, வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கோரியே இந்த போரட்டம் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிநீரையேனும் எடுத்துக் கொள்ளாமல் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் இவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடில் விலைமதிப்பற்ற சில உயிர்களை இழக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை சம்பவ இடத்திற்கு அனுப்பி, போராட்டத்தை மேற்கொண்டு வருபவர்களுக்கு உறுதிமொழிகளை வழங்குமாறும் தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெண் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வடக்கு முதல்வர் கோரியுள்ளார்.