பொலிசார் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் : ஸ்ரீசாந்த்!!

294

sreesanth

பொலிசார் என்னை உடல் ரீதியாக வற்புறுத்தியதால் தான் வாக்குமூலம் கொடுத்தேன் என்று வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் அப்பாவி, தவறு செய்யவி்ல்லை என்று விளக்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னை பொலிசார் தங்களது காவலில் வைத்திருந்தபோது உடல் ரீதியாக துன்புறுத்தினர். கட்டாயப்படுத்தினர்.

அதன் பேரில்தான் நான் வாக்குமூலம் அளிக்க நேர்ந்தது. மேலும் எனது உறவினர்களையும் கைது செய்வோம் என்று மிரட்டினர். நான் காவல்துறையினரிடம் விருப்பப்பட்டு வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை. மனரீதியாக, உடல்ரீதியாக என்னை பொலிசார் துன்புறுத்தினர்.

ஏற்கனவே எழுதி வைத்திருந்த அறிக்கைகளில் கையெழுத்து வாங்கினர்.
பொலிசார் கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில்தான் நான் குற்றம் செய்தவன் என்று கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரி முடிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் இதை ஏற்க முடியாது. காவல்துறையினரின் விசாரணை முறைகள் கட்டாயத்தின் பேரில் இருந்தன என்பதால் அதை வாரியம் ஏற்கக் கூடாது. சூதாட்டம் தொடர்பாக நான் யாருடனும் பேசியதை காவல்துறை இடைமறித்துக் கேட்கவில்லை. அதுதொடர்பான ஆதாரம் அவர்களிடம் இல்லை.

என் மீதான காவல்துறையின் குற்றச்சாட்டு நியாயமற்றது. நான் லஞ்சம் வாங்கியதற்கும், கொடுத்ததற்கும், பணம் பெற்றதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்றும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதே உண்மை எனவும் கூறியுள்ளார்.