யாழ் கொலையை நேரில் கண்ட சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் : பாதுகாப்பு வழங்க நீதவான் உத்தரவு!!

658

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற கொடூர கொலை சம்பவத்தில் கண்கண்ட சாட்சியாக உள்ள மாற்றுத்திறனாளி சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கரம்பன் பகுதியில் இடம்பெற்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் கொலை சம்பவத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கண்கண்ட சாட்சியாக உள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

குறித்த சிறுவன் வீட்டை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என அடம்பிடிப்பதாகவும் பொலிஸார் நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 8ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அதுவரை குறித்த சிறுவனை பாதுகாப்பு பாடசாலையில் அனுமதிக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் இன்று உத்தரவிட்டார்.

கடந்த 24ஆம் திகதி ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் யாழ். ஐந்து சந்திப்பகுதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும், புத்தளத்தை பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவரை பொலிஸார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.