வவுனியா மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்!!

471

 
வவுனியா – நெடுங்கேணி சிவாநகர், குறிசுட்டகுளம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காட்டு யானைகள் நேற்று (30.01.2017) மாலை அந்த பகுதிக்கு சென்று அங்கு வசித்துவரும் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளதுடன் தமது ஜீவனோபாயமான பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியதாகவும் அதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

கடந்த பல மாதங்களாக காட்டு யானைகள் தமது பகுதிகளுக்குச் சென்று வருவதாகவும், வீதியில் கடந்து செல்வது தொடர்பாக அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் இன்று வரையில் தமது பகுதிக்கு வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த மின்சார வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அச்சத்தின் மத்தியில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.