வவுனியாவில் சம்பளத்தை கேட்ட பெண் ஊழியர் மீது முகாமையாளர் தாக்குதல்!!

485

வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவரின் சம்பளப் பணத்தினை அந் நிறுவனத்தின் முகாமையாளர் நிறுத்தி வைத்துள்ளார்.

இதையடுத்து நேற்று (30.01.2017) குறித்த பெண்ணின் கணவர் சென்று தனது மனைவியின் சம்பளப் பணத்தினை பெற்றுத்தருமாறு கோரியபோது இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் மோதலை தடுக்கச் சென்றபோது மனைவி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வரும் குறித்த பெண்ணின் சம்பளப்பணத்தினை கடந்த மாதத்திலிருந்து முகாமையாளர் நிறுத்திவைத்துள்ளார்.

அதையடுத்து நேற்று (30.01.2017) அதே நிறுவனத்தில் வேறு பிரிவில் பணியாற்றி வரும் கணவன் முகாமையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மனைவியின் சம்பளப்பணத்தினை பெற்றுத்தருமாறு கோரியபோது இருவருக்கும் இடையே நிறுவனத்திற்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையினை தடுப்பதற்குச் சென்ற குறித்த பெண்மீது தலைக்கவசத்தினால் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய முகாமையாளரை பொலிசார் இன்று வரையில் கைது செய்யவில்லை.