ட்ரம்ப்பின் முடிவால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!!

622

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில் ஈராக், சிரியா, ஏமன், சூடான், லிபியா, சோமாலியா உள்ளிட்ட 7 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரேச்சல் அட்ரியான் என்னும் தாதி , 2013ஆம் ஆண்டு பணிநிமித்தம் காரணமாக ஈராக் சென்றுள்ளார். அப்போது ஈராக் சன்னி முஸ்லிமான ஹோகர் அமீனை ரேச்சல் சந்திக்க, இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் திருமணம் முடித்துள்ளனர். அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் குடியேற இவர்கள் விரும்பினர்.

தற்போது ரேச்சல் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பெப்ரவரி 2ஆம் திகதி குழந்தை பிறக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமீன் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்காவில் குடியேற விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இஸ்லாமியர் என்பதால் இவருக்கு நேர்முகத் தேர்வு, உடல் பரிசோதனை என மற்ற மதத்தினர்களைக் காட்டிலும் கெடுபிடிகள் கூடுதலாகவே இருந்தன.

எல்லா கட்டத்தையும் வெற்றிகரமாகத் தாண்டிய அமீன், மனைவியின் பிரசவகாலத்தில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்த வேளையில், ட்ரம்ப் 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்க வர தடை விதித்துள்ளார்.

இந்த தடை உத்தரவால் அமீனால் பிரசவத்தின் போது மனைவியின் அருகில் இருக்க முடியாமல் போய்விட்டது. ஏற்கனவே ட்ரம்ப்பின் இந்த தீர்மானத்துக்கு பல தரப்பினர் பலத்த எதிர்ப்பை காட்டிவரும் நிலையில், ரேச்சல் – அமீனின் கதை சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.