லண்டனில் உள்ள ஒரு பாடசலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (30) ஆசிரியையாக பணி புரிகிறார். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்றே டயானாவுக்கு பாடசாலை வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
அன்று பாடசலைக்கு சென்ற டயானா தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு தொலைபேசியில் கூறினார்.
அவரும் விரைந்து பாடசாலைக்கு சென்றார். இதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் அம்புலன்ஸ் வாகனத்துக்கு அழைப்பை மேற்கொண்டனர். அம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும் பாடசாலை நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.