வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணை நடைபெறவுள்ளது.
வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக இதுவரை ஐந்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பினை மீறி உள்ளதாக உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை இடைக்கால நிவாரணமாக வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு உத்தரவிட வேண்டுமென்றும் இந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தேசப்பற்றுள்ள பௌத்த முன்னணி, சுவர்ண ஹன்சா மன்றம், பெளத்த மகா அமைப்பு, யாழ். பௌத்த முன்னணி ஆகிய ஐந்து அமைப்புக்களே தாக்கல் செய்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில் வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு இடைக்கால நிவாரணம் கோரப்பட்டுள்ளமையினால் அது குறித்து இன்றைய தினம் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கையின் ஒருமைப்பாட்டை மீறுவதுடன் தனி நாட்டுக்கான பாதையாக அமைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நோக்கம் இலங்கையின் ஆட்புலத்தில் ஒரு தனி நாடு அமைப்பதென நீதிமன்றம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளன.