திருமலை மாவட்ட புலிகள் இயக்க முன்னாள் தலைவர் பதுமன் விடுதலை!!

826

pathuman

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவர் சுப்ரமணியம் வரதநாதன் எனப்படும் பதுமன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு பதுமன் இன்று விடுதலையாகியுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ரணராஜா இந்த விடுதலை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பதுமன் 2002ம் ஆண்டு புலிகள் இயக்க திருகோமலை தலைவராக செயற்பட்டதாகக் கூறப்படுகிறது. கருணா அம்மானுடன் இணைந்து புலிகளுக்கு எதிராக செயற்பட்டதாகக் கூறி புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பதுமனை வவுனியாவிற்கு அழைத்து சிறை வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதுமன் பொது மக்களுடன் சேர்ந்து அரச படைகளிடம் சரணடைந்துள்ளார். 1979 இலக்க 48 என்ற சட்டத்தின் கீழ் பதுமன் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலிகள் இயக்கத்தில் இருந்து இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி படை வீரர்களை கொன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பதுமன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் பயங்காரவாத தடுப்புப் பிரிவினர் சார்பில் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.