தொற்றா நோய் வரிசையில் மிக முக்கியமான இடத்தை புற்றுநோயானது பிடித்துள்ளது. இலங்கையில் புற்று நோய் காரணமாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்பது பேர் வரை இறக்கின்றனர் என்று பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
பெப்ரவரி 04 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
உலகம் முழுவதும் ஏழில் ஒரு மரணத்தை ஏற்படுத்துகின்ற காரணியாக புற்றுநோய் காணப்படுகின்றது. உலக புற்றுநோய் அறிக்கையானது 14.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆண்டு தோரும் 8.2 மில்லியன் மக்கள் புற்றுநோயினால் இறக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் உலக புற்றுநோய் தின பிரசார தொனிப்பொருளாக “என்னால்முடியும், நம்மால் முடியும்” என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொனிப்பொருளுடனான 2017 ஆம் ஆண்டுக்குரிய உலக புற்றுநோய் தினம், புற்றுநோய்க்குரிய சிகிச்சை தீர்வுகளை கண்டறியவும் இதற்கெதிரான போராட்டத்தில் ஒரு உயிர்ப்பான அணுகுமுறையை கையாளவும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கையை பொறுத்தமட்டில் கடந்த காலங்களை விட தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகமாகியுள்ளது. இதில் ஆண்களுக்கு பொதுவாக வாய்குழி,தொண்டை,வாதனாளி, நுரையீரல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுகின்றது இதற்கு புகையிலை, புகைப்பிடித்தல், மது, பாக்குவகைகள் ஆகியவற்றின் பாவனை காரணங்களாக அமைகின்றன.
பெண்கள் மார்பக புற்றுநோய்,கருப்பை கழுத்து புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பிரதான காரணமாக உடல் எடை அதிகரிப்பு, பாலியல் தொற்றுக்கள் என்பன உள்ளன.
புற்றுநோயை இழிவளவாக்குவதற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கராப்பிட்டிய, குருணாகல், இரத்தினபுரி, கண்டி ஆகிய பிரதேசங்களில் புற்றுநோய் சத்திர சிகிச்சைக்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புற்றுநோயை கட்டுப்படுத்த மதுசாரம்,புகையிலை,பாக்கு வகை போன்றவற்றில் அரசாங்கம் தடைகளை வலுப்படுத்த வேண்டும். இரசாயன பாவனைகளை உணவு உற்பத்தியில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் அதிக உரைப்பான, சூடான உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும். இரசாயனம் கலந்த உணவுப் பாவனையை தவிர்ப்பதனாலும் புற்றுநோயை இழிவளவாக்க முடியும் என்றார்.