வவுனியா இ.போ.ச ஊழியர்களால் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு இறுதிக்கிரியை : கொடும்பாவியும் எரிப்பு!!

231

 
வவுனியாவில் இன்று (03.02.2017) தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, ஆகியோர் இ.போ.ச. சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து கலந்தரையாடியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனுடனும் கலந்துரையாடி ஒரு சாதகமான முடிவினை பெற்றுத்தருவதாக தெரிவித்துச் சென்றனர்.

தற்போது வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலமையில் இவ்விடயம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , கே.கே.மஸ்தான் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, செ.மயூரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச ஊழியர்களை சந்திக்க மறுத்ததுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தனது செய்தியை அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் டெனிஸ்வரனின் கொடும்பாவிக்கு முன்னால் ஒப்பாரியிட்டு அழுது , சிரித்து, வெடி கொழுத்தி, முட்டியுடைந்து கொடும்பாவியினை எரித்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாணத்தில் ஏழு சாலை ( வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை, கோண்டாவில் ) ஊழியர்களும் பேரூந்துக்களில் வவுனியா உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் இப் பணிப்புறக்கணிப்பினால் இரண்டு நாட்கள் வடமாகாண மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.