வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு!!

363

 
இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இருதரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு மற்றும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பேரூந்து சேவையினை சீர் செய்வதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்..

இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்குமிடையில் கடந்த ஐந்து நாட்களாக கருத்து முரண்பாடுகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைத் தரப்பினர் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு பஸ் சேவை இடம்பெறாமல் சிரமமான நிலை ஏற்பட்டு இருந்தது.

இந் நிலையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வட மகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நான் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான ஜயதிலக, மயூரன் உட்பட அரசாங்க அதிபர், பொலிஸ் தரப்பினர், மற்றும் இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து துறையை சேர்ந்த பொறுப்பானவர்கள் அதனுயை தொழிற்சங்கங்கள் என அனைத்தும் சேர்ந்து பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டெனிஸ்வரன் தலைமையில் அவருக்கு கீழ் உள்ள தலைவர் நிக்கிலஸ்பிள்ளை அவருடன் சேர்ந்து வட மாகாண போக்குவரத்து சபையின் சி.ஆர்.எம். நிறைவேற்றுப் பணிப்பாளர், வட மாகாண தனியார் பேரூந்து சபையின் தலைவர் செயலளார் உட்பட நான்கு உத்தியோகத்தர் வீதம் இணைந்து மிக விரைவில் இணைந்த நேர அட்டவனையினை தயாரிப்பதாகவும் அதனை மிக விரைவில் அமைச்சரிடம் கையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் மாவட்டத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கான பேரூந்து நிலையமாக செயற்படுமெனவும் அதுவரை இரு தரப்பினரும் புதிய பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டார்களோ அது போல் முரண்பாடுகள் இன்றி செயற்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட உள்ளுர் சேவைகளை பழைய பேரூந்து நிலையத்தில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படும் வகையில் இணைந்த நேர அட்டவனை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே இதற்கு இரண்டு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர். அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்.

அங்கு கருத்து தெரிவித்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையினை நடத்தவேண்டும் என்பதற்காகவே கடந்த காலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன்.

இரண்டு தரப்பினருக்குமிடையில் உள்ள முரண்பாட்டை ஆராய்கின்றபோது இணைந்த அட்டவணை இல்லாமைதான முக்கிய காரணமாக இருக்கின்றது.

குறிப்பாக வெளி மாவட்டங்களுக்கான இணைந்த நேர அட்டவனை தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையினரின் கோரிக்கையான மாவட்டங்களுக்கிடையிலான உள்ளுர் சேவைக்கான இணைந்த நேர அட்டவணையும் தயார் செய்து அதனை அமுல்படுத்தப்பத்தவும் தாயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

ஆகவே தனியார் துறையினரிடமும் அது தொடர்பில் கேட்டிருக்கின்றேன். இணைந்த நேர அட்டவணை தயார் செய்யப்பட்வுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சந்தர்ப்பத்தில் யாரேனும் அதனை மீறுவார்களேயானால் ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேபோல் பல லட்சம் ரூபா பெறுமதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அது தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளது. இணைந்த நேர அட்டவணையை ஒரு வார காலத்தில் தயார் செய்து தருகின்றபோது மறுதினத்தில் இருந்தே புதிய பேரூந்து நிலையம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை கூட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான செ.மயூரன், ஏ.ஜயதிலக உட்பட்ட பிரமுகர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு சென்று அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்து வைத்தனர்.