அவதானம் : ஈஷி கேஸ் ஊடாக பணம் பறிக்கும் கும்பல்!!

211

போலியன குறுஞ்செய்தி போட்டிகளில் வெற்றிபெற்றதாக கூறி, ஈஷி கேஸ் ஊடாக பொது மக்களிடம் பணம் பறித்து வந்த திட்டமிட்ட குற்றக் குழுவொன்றினை கல்கிஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுச் செய்துள்ளனர்.

பெண் ஒருவரையும் மேலும் இருவரையுமே இவ்வாறு கைது செய்ததாகவும் இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுக்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களினால் நடத்தப்படுகின்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்து போலியான குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடுவது தொடர்பான முறைப்பாடுகள் பல, கடந்த தினங்களில் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

கல்கிஸை விஷேட குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த இதுபோன்ற முறைப்பாட்டு காரணமாக, பெண்ணொருவர் உட்பட 3 பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் நடத்தப்படுகின்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் 11 இலட்சத்து 76,000 ரூபா நிதி மோசடியில், இவர்கள் ஈடுபட்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் வெல்லம்பிட்டி, கொலன்னாவ மற்றும் மாவனல்லை பிரதேசங்களை சேர்ந்த 43, 37, 50 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கல்கிஸை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.