அவதானம் : வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8697 டெங்கு நோயாளர்கள் பதிவு!!

478

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 8697 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டார்.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடலை சுத்தம் செய்வதற்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு நோய் பரவுதல் தொடர்பில் விசேட விழிப்புணர்வு தேவைப்படுவதாகவும் டொக்டர் பிரசீலா சமரவீர கூறினார்.

பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கொழும்பில் உள்ள 170 பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் சமூக வைத்திய நிபுணரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இது தொடர்பான சட்டமூலம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.