வவுனியாவில் இரும்புக் கம்பியிலான மின்கம்பத்தினால் ஆபத்தை எதிர்கொள்ளும் மக்கள்!!

284

 
வவுனியா இறம்பைக்குளம் வீதியிலுள்ள மின்சார கம்பங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதுடன் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

வவுனியா இறம்பைக்குளம் வீதியில் காணப்படும் இரும்புக் கம்பியிலான ஐந்து மின்கம்பங்களில் இருந்தே அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மின்கம்பங்களில் மழை காலங்களில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக விலங்கினங்கள் சில இறந்துள்ளதாகவும், இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் 30 வருடத்திற்கும் மேலாக குறித்த மின் கம்பங்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் காணப்படுகின்றமையினால் எவ்வேளைகளிலும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.