அங்கோலாவில் கால் பந்தாட்ட மைதானத்தில் கூட்ட நெரிசல் : 17 பேர் உடல் நசுங்கி பலி!!

353

அங்கோலாவில் உள்ளூர் கால் பந்தாட்ட போட்டியை காண முண்டியடித்த ரசிகர்கள் 17 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கோலாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கால் பந்தாட்ட மைதானத்தில் முதல் நிலை கால் பந்தாட்ட போட்டி ஒன்று ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.

குறித்த போட்டியை காண ரசிகர்கள் திரளானோர் முண்டியடித்ததாக கூறப்படுகிறது. 8000 பேர் மட்டுமே அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்க கூடிய அந்த அரங்கில் திரளானோர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் 17 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து குறித்து இதுவரை காவல்துறை மற்றும் கால்பந்தாட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.