காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ரோஜா பூக்கள் அடங்கிய 4 பெட்டிகள் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நான்கு பெட்டிகளில் மொத்தமாக 53 கிலோகிராம் வாடாத ரோஜா பூக்கள் காணப்பட்டுள்ளன. இவை பெத்தகான வீதி, கோட்டே என்ற முகவரியிடப்பட்ட நிலையில் வர்த்தகரொருவரின் பெயரில் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் யூ.எல் 124 என்ற விமானத்தின் ஊடாக கடந்த 8 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோஜா பூக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக NPQS/CFL/206/053 என்ற பதிவிலக்கத்தில் அனுமதிப்பத்திரமொன்று பெறப்பட்டிருந்த போதிலும், அப்பத்திரம் நிபந்தனைகளுக்கு உட்படாமல், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டிருந்தமையினால் சுங்கத்தினர் அவற்றினை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சுங்கத்தினரால் கைப்பற்றப்பட்ட பூக்களை விடுவிப்பதற்காக விமான நிலையத்துக்கு சென்ற குறித்த வர்த்தகர், பிரபல அமைச்சரொருவரின் உத்தரவுக்கமையவே இவை கொண்டுவரப்பட்டதாக தெரிவித்திருந்ததோடு சுங்க அதிகாரிகளின் முன்னிலையிலேயே குறித்த அமைச்சருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
எனினும் சுங்கத்தினர் அப்பூக்களை விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுத்திராது தடுத்துவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.