பெண்ணொருவரின் மண்டையோட்டுக்குள் மூளைக்கு அடியில் உயிருடன் காணப்பட்ட கரப்பான் பூச்சியொன்றை சென்னை வைத்தியசாலையொன்றில் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயதான செல்வி என்ற இப் பெண், அண்மையில் இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவரின் மூக்கினுள் கரப்பான்பூச்சி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதை செல்வி அறிந்திருக்கவில்லை. எனினும், மறுநாள் கடுமை யான வலி காரணமாக இப் பெண் அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற சென்றபோதிலும் மருத்துவர்களால் அவருக்கு என்ன பிரச்சினை என்பதை கண்டறிய முடியவில்லை.
வலி குறையாதிருந்த நிலையில், இறுதியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
அங்கு மூக்கில் மேற்கொள்ளப்பட்ட என்டோஸ்கோப்பி பரிசோதனையில், கரப்பான் பூச்சியானது மண்டையோட்டின் அடிப்பகுதி யில் இரண்டு கண்களுக்கும் நடுவில் மூளைக்கு அருகில் இருந்தமை தெரியவந்தது. இதன்பின்னர், 45 நிமிட சிகிச்சைக்கு பின்பு கரப்பான்பூச்சி வெற்றி
கரமாக வெளியே எடுக்கப்பட்டது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காது – மூக்கு – தொண்டை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் இது குறித்து கூறுகையில், இப் பெண்ணின் மூக்குக் குழாயை ஆராய்ந்தபோது, அதற்குள் சிறிய கால்கள் அசைவதைக் கண்டேன். மேலும் ஆராய்ந்தபோது, சுமார் 5 சென்ரி மீற்றர் நீளத்தில் அசாதாரணமான ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்தேன்.
பின்னர், அது கரப்பான்பூச்சி ஒன்றின் அடிப்பாகம் எனத் தெரியவந்தது. அதையடுத்து உறிஞ்சும் கருவி, கவ்விப்பிடிக்கும் உபகரணம் ஆகியவற்றை கொண்டு கரப்பான் பூச்சியை எடுத்தோம். கரப்பான்பூச்சி இடது புறத்தில் இருந்திருந்தால், நோய்த்தொற்று ஏற்பட்டு, மூளையைப் பாதித்திருக்கும்” என்றார்.
இக் கரப்பான்பூச்சியானது இப் பெண்ணின் மண்டையோட்டுக்குள் சுமார் 12 மணித்தியாலங்கள் உயிருடன் இருந்துள்ளது என டாக்டர் எம்.என். சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செல்வி கூறுகையில், “இரவு உறக்கத்தில் இருந்தபோது மூக்குக்குள் பூச்சி உள்பக்கம் நகரும்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டு, நீர் வந்தது. தலைக்குள் கூசுவது போன்றும், ஊர்வது போன்ற உணர்வால் இரவு முழுவதும் அவதிப்பட்டேன். இப்போது குணமாகிவிட்டது’ என்றார்.