உலகின் உயரம் குறைந்த பெண்ணின் குறை தீர்ந்தது!!

265

தனக்குத் திருமணம் ஆகுமோ, ஆகாதோ என்ற கவலையில் மூழ்கிப்போயிருந்த உலகின் உயரம் குறைந்த பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது, அதுவும் ஒரு சதம் கூடச் செலவில்லாமலேயே.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் சேய்பொன் ஜாருன்சி. 38 வயதாகும் இவருக்கு, பிறப்பின்போதே ஏற்பட்ட ஒரு கோளாறினால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் உடல் ஒரு அளவுக்கு மேல் வளர்ச்சியடையாமல் போய்விட்டது. மேலும், இந்தக் கோளாறினால் ஜாருன்சியால் நடக்கவும் முடியாமல் போனது.

இவரது இந்தப் பிரச்சினையால் சிறு வயது முதலே பலரது கேலிக்கும் ஆளாகினார். இதன் விளைவால் இவரால் சமூகத்துடன் ஒன்றிப் போக முடியாமல் போனது. இதனால் வறுமையும் இவரைக் கௌவிக்கொண்டது.

தனது நிலை கண்டு வருந்திய ஜாருன்சி, தனக்குத் திருமணமாகுமோ, தன் மீது அன்பு செலுத்தும் ஒருவரை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமல் போகுமோ என்ற பயமும் ஏற்பட்டது. ஆனால் அந்தப் பயம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை.

தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றும் 65 வயது (!) நபர் ஒருவருடன் ஜாருன்சிக்கு நட்பு ஏற்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மாறியது. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க முடியாது என்ற நிலையை அடைந்த அவர்கள், திருமணம் செய்துகொள்வதற்கு போதுமான பணம் இல்லாததால், சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில், ரிச்சாவீபத் என்ற அழகுக் கலை நிபுணர் ஒருவருடன் ஜாருன்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. பெரும் செல்வந்தர்களுக்கு அழகு சிகிச்சை செய்பவர் ரிச்சாவீபத். அவரிடம் தனது திருமணக் கனவை சொன்ன ஜாருன்சி, தனக்கு இலவசமாக ஒப்பனை செய்து தர முடியுமா என்று கேட்டார்.

ஜாருன்சியின் நிலை கண்டு இரக்கம் கொண்ட ரிச்சாவீபத், தனக்குத் தெரிந்த ஒரு திருமண ஏற்பாட்டு நிலையத்துடன் தொடர்புகொண்டு ஜாருன்சியின் நிலை பற்றித் தெரிவித்தார். அவர்களும் களமிறங்க, ஜாருன்சியின் திருமணம் வெகு கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது.

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று சொல்லும் ஜாருன்சியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பியிருக்கின்றன.