
திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட எயார் – ஏசியா விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 4.30 மணிக்கு எயார் ஏசியா விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 124 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது, பறவை ஒன்று மோதியது. அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை தரையிறக்க முடிவு செய்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரையிறக்க சிக்னல் கிடைக்க தாமதமானதால் நடு வானிலேயே விமானம் வட்டமிட்டது. ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம் 5:30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, விமானத்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டனர்.
இன்ஜினில் ஏற்பட்ட சிறிய அளவிலான பாதிப்பு சரி செய்யப்பட்ட பின் பயணிகள் ஏற்றப்பட்டு இரவு 7:15 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. எரிபொருள் தீர்வதற்காக திருச்சியைச் சுற்றி விமானம் ஒரு மணி நேரமாகப் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.





