வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர் ஒருவர் 54 ஆண்டுகளின் பின் சீனாவுக்குத் திரும்புவதற்கு இந்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ எனும் இந்த இராணுவ வீரர், 1963 ஆம் ஆண்டு இந்தோ – சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து, இந்திய இராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார்.
அந்தத் தண்டனை முடிந்ததும் தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வாங் க்யூ இருந்தார். ஆனால், தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிரோடி என்னும் கிராமத்தில் இந்திய இராணுவத்தினர் கொண்டு போய்விட்டனர்.
கடவுச்சீட்டு விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் அங்கேயே வாழ ஆரம்பித்தார். அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணியையே திருமணம் செய்துகொண்டார். வாங் க்யூ 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். பின்னர் பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தாவும் ஆனார்.
தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர் உள்ளத்தின் ஓரத்தில் ஓர் ஆசை அவரை உறங்கவிடாமல் செய்தது. தான் பிறந்த மண்ணையும், தன் இரத்த சொந்தங்களையும் காண வேண்டும் என்று அவர் ஏங்க ஆரம்பித்தார்.
1980களில் சீனாவில் உள்ள தன் சொந்தங்களுடன் கடிதப் போக்குவரத்தை ஏற்படுத்திக்கொண்டார். இது, அவரது சொந்தங்களைக் காண வேண்டும் என்ற ஆசையை இன்னும் தூண்டியது. பல மனுக்கள் கொடுத்தும் இந்திய அரசு இந்த சீன வீரரின் கோரிக்கையை ஏற்கவில்லை.
2009இல் வாங் க்யூவின் மைத்துனர் இந்தியாவுக்குச் சென்று அவரைச் சந்தித்துச் சென்றார். 2013 ஆம் ஆண்டில் சீன அரசு, வாங் க்யூவுக்கு கடவுச்சீட்டு வழங்கியது. ஆனால், இந்திய தரப்பில் அவருக்கு விசா வழங்கப்படவில்லை.
தன்னால் சீனா போய் தான் பிறந்த ஊரின் காற்றைச் சுவாசிக்க முடியவில்லையே என்ற பரிதவிப்புடன் இருந்த வாங் க்யூவை, பிரபல செய்தி நிறுவனம் ஒன்று அடையாளம் கண்டு, அவரின் 54 ஆண்டு கால போராட்டத்தைச் செய்தியாக வெளியிட்டது.
இந்தச் செய்தி, இரண்டு நாடுகளிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சீனாவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் வாங் க்யூவுக்கு ஆதரவுக் குரல்கள் கூடின. இதனை உணர்ந்த இந்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகி, வாங் க்யூவை, சீனாவுக்கு அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில், கடந்த 9 ஆம் திகதி தன் மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் சீனாவுக்குப் பறந்தார் வாங் க்யூ. சீன விமான நிலையத்தில் அவரின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காத்திருந்தனர். அன்றைய தினம் சீனர்களின் முக்கியப் பண்டிகையான விளக்குத் திருவிழா நடைபெற்றது.
விமான நிலையம் சென்ற வாங் க்யூவை அவரின் உறவினர்கள், சகோதரர்கள் கட்டித் தழுவிக்கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய வாங் க்யூ, “இந்த நாள் என் வாழ்வில் சந்தோஷமான நாள். என் பால்ய நண்பர்களை, என்னுடன் இராணுவத்தில் பணியாற்றிய சகவீரர்களை நான் தேடிப்போய் சந்திக்கப் போகிறேன்” என்றார்.
அவருக்கு சீன அரசாங்கம் அவரின் சொந்த ஊரில் வாழ்வதற்கு இலவசமாக நிலம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.