ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 74 அகதிகள் பலி : லிபிய கடற்பரப்பில் சம்பவம்!!

588

 
உள்நாட்டு அரசியல் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளின் ஒவ்வாத நிலையால், ஐரோப்பிய நாடுகளுக்கு படகில் தப்பிச் செல்ல முயன்ற 74 அகதிகள் லிபியா அருகேவுள்ள கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

லிபியாவில் நிலவும் அரசியல் முறுகல் நிலை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வருவதுடன், அதில் பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு, படகுகள் மூலம் தப்பி சென்று சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்த மக்கள், சிறிய படகொன்றின் மூலம் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்றுள்ளநிலையில், ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக குறித்தப் படகு உடைந்து, கடலில் கவிழ்ந்துள்ளதாகவும் அதில் பயணித்த 74 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும்கடல் வழியாக சட்டவிரோத குடியேற்றங்களை மேற்கொள்ளும் மக்கள், கடலில் மூழ்கி பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுவதாகவும், மேலும் இவ்வாறான அனர்த்த சுழலில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபிய மக்கள் அகதிகளாக செல்வதை தடுக்க அந்த நாட்டு கடலோர காவல் படை, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், தொடர்ச்சியான கண்காணிப்புகள் மூலம் கடல் விபத்துகளை தவிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.