இறந்துவிட்டதாக கருதப்பட்ட இளைஞன் ஒருவர், மயானத்துக்கு கொண்டு செல்லப்படும் வழியில் விழித்தெழுந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மனாகுந்தியைச் சேர்ந்த குமார் மேர்வாட் எனும் இந்த இளைஞருக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கட்டாக் காலி நாய் ஒன்று கடித்தது.
கடந்த வாரம் இந்த இளைஞனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அந்த இளைஞரின் உடலில் தொற்றுக்கள் அதிகமாக பரவியுள்ளதாகவும் சுவாசக்கருவிகள் இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியாது எனவும் மருத்துவர்கள் கூறினர்.
அதையடுத்து குமார் மேர்வாட வீட்டுக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் தீர்மானித்ததாக அவரின் மைத்துனரான சர்னப்பா நாயக்கர் தெரிவித்துள்ளார். அண்மையில், குமார் சுவாசிக்காமல் இருப்பதை அவதானித்த குடும்பத்தினர், அவர் இறந்துவிட்டதாகக் கருதினர்.
இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மயானத்துக்கு குமாரின் உடலை சுமந்து சென்றபோது, அவர் விழித்தெழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் தனியார் வைத்தியசாலையொன்றில் குமார் மேர்வாட் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாய்க்கடியினால் குமார் மேர்வாட்டுக்கு ஏற்பட்ட தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக டாக்டர் என். மகேஷ் தெரிவித்துள்ளார்.