ஆபிரிக்காவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் 1.4 மில்லியன் சிறார்கள்!!

713

 

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு உதவிகளை வழங்க உலக நாடுகள் சில முன்வந்துள்ளன. தென்சூடானில் பஞ்சத்தினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, அவசர உதவி தேவைப்படும் தென்சூடானுக்கு 170 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், நைஜீரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஜேர்மன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் மற்றும் யேமன் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களுக்கு உகவுவதற்கு எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யேமனில் இடம்பெற்றுவரும் இரண்டு வருட தொடர்ச்சியான உள்நாட்டுப் போரினால் சுமார் 10,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்ட குட்டேரஸ், போரின் விளைவாக மக்கள் கடும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரவித்துள்ளார்.

மதிப்பீட்டின் அடிப்படையில் யேமனிலுள்ள 7.3 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.