வன்னிப் பல்கலைகழக கோரிக்கை ஆதரவு பேரணிக்கு அணிதிரளுமாறு வடக்கு சுகாதார அமைச்சர் அழைப்பு!!

373

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28ம் திகதி வவுனியாவில் நடபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பான அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 1992 ல் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் பல்கலைகழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களிpன்; பல்கலைகழக கல்லூரிகள் பல்கலைகழகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பல்கலைகழக கல்லூரியானது தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைகழக நிர்வாகத்தின்கீழ் வவனியா வளாகமாக இயங்கி வருகின்றது.

காலத்தின் தேவைகருதி வவுனியா வளாகமானது பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் வவுனியா மாவட்ட புத்திஜீவிகளுடன் இணைந்து வளாகத்தினை பல்கலைகழகமாக தரமுயர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அதேபோன்று எமது மாவட்டத்தைசேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பலமுயற்சிகளை எடுத்திருந்தனர். எனினும் இந்த முயற்சி இதுவரை கைகூடவில்லை.

வன்னி பிரதேசமானது கடல்வளம், விவசாயம், இயற்கையான காடுகள் மற்றும் பல்வகையான நீர் வளங்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது. இந்த பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அத்துடன் வன்னிப்பிரதேசத்திற்கென தனியான பாரம்பரியம், வரலாறுகள் உள்ளன.

இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய நமது பிரதேசத்துக்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் வன்னிப்பிரதேசத்திற்கு பொருத்தமான புதிய பீடங்களையும் இங்கே ஆரம்பிக்கமுடியும்.

மூன்று இனங்கள் வாழுகின்ற இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைகழகமாக தரமுயர்த்த அரசாங்கத்தை வலியுறுத்தி நடைபெறவள்ள இந்த பேரணிக்கு தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளினால் நாம் பிரிந்துநின்று எமது மாவட்டத்திற்கு வந்த பாரிய அபிவிருத்திட்டங்களை கோட்டை விட்ட அண்மைய கசப்பான அனுபவங்கள் எமக்குள்ளது. இந்த விடயத்திலும் அவ்வாறான துரதிஸ்ரவசமான நிகழ்வுகள் நடைபெறுவதை அனுமதிக்கமுடியாது. எனவே எதிர்வரும் 28ம் திகதி காலை 10 மணிக்கு குருமண்காட்டில் அமைந்துள்ள வவனியா வளாகத்தின் பௌதீகவிஞ்ஞான பீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள பேரணியில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.