களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.
களுத்துறை – சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வெள்ளை நிற வேன் ஒன்று, ஹொரணை – மொரகஹாஹென பகுதியில் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது.
குறித்த வேன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானைப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட வேன் என்பதோடு குறித்த வேன் திருகோணமலையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு பாதாள உலகக் கோஷ்டி சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறைச்சாலை பஸ் வண்டி மீது களுத்துறை, மல்வத்த – எத்தனமடல பகுதியில் வைத்து சரமhரியான துப்பhக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது அந்த பஸ் வண்டியில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனான ‘ரணாலே சமயா’ அல்லது சமயங் என அறியப்படும் எம்.பி. அருண தமித் உதயங்க பத்திரண உள்ளிட்ட 5 கைதிகளும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நான்கு சிறைச்சாலை அதிகாரிகள் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு வெள்ளை நிற வேன் ஒன்றில் தப்பிச் சென்றனர்.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கெப்ரக வாகனம் கொள்ளையிடப்பட்ட வாகனம் எனவும் இதன் உரிமையாளர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனவும் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேனும் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானை பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்ட வேன் என்பதோடு திருகோணமலையைச் சேர்ந்த வேனின் உரிமையாளரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.