வவுனியாவில் பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல்!!

559

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் மீது நேற்று (28.02.2017) மாலை 4.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள இளைஞர் மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் மேலதிக வகுப்புக்களை நிறைவு செய்துவிட்டு வீடு சென்றுகொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் தன்னுடன் மேலதிக வகுப்பில் கல்வி கற்ற மாணவர் ஒருவரையும் தனது துவிச்சக்கரவண்டில் ஏற்றிச் சென்றுள்ளார்.

அதன்போது அப்பகுதியில் நின்ற இளைஞர் ஒருவர் மதுபோதையில் ஆசிரியரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பாடசாலைக்கு செல்லும் வீதியிலுள்ள கடை ஒன்றில் நின்றுள்ளார்.

எனினும் கடைக்குச் சென்ற குறித்த இளைஞன் ஆசிரியர் ஏற்றிச் சென்ற மாணவனைமுதலில் தாக்கியுள்ளதுடன் ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இன்று(01.03) காலை ஆசிரியரினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதல் மேற்கொண்ட நபர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியிலுள்ள பாடசாலையைச் சுற்றியுள்ளவர்கள் பாடசாலைக்குள் சென்று அதிபருக்கு பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினை வாபஸ் பெறுமாறு தெரிவித்து வருகின்றனர்.

தாக்குதல் மேற்கொண்ட இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.